கருணை வைத்த வருண பகவான்.. 60 அடியை எட்டிய மேட்டூர் அணை.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 5,415கன அடியாக உள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 25 அடி உயர்ந்து தற்போது 60 அடியாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும். நடப்பாண்டு கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். தென் மேற்கு பருவமழை

காவிரியில் தண்ணீரை கர்நாடகா திறக்காத நிலையில், தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு முழுவதும் குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவைக் கண்டு 30 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சியை சந்தித்தது.
இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரை அக்டோபர் 10ஆம் தேதி முதல் நிறுத்தியது நீர்வளத் துறை. மேலும், டெல்டாவில் குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுவிட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல ஊர்களில் பருவமழை பெய்து ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பிலிகுண்டுவிற்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி எல்லையோர பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8,737 கன அடியிலிருந்து 5,415கன அடியாகச் சரிந்துள்ளது. நீர் இருப்பு 24.50 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications