மாணவிக்குப் பாலியல் தொல்லை.. புகாரை மறைத்த சேலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது
சேலம்: பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை, குழந்தைகள் உதவி மையம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சேலம் ஆத்தூர் பள்ளியில் மாணவிக்கு அதே பள்ளி மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை மறைத்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கின்றன. வீடு தொடங்கி பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. முக்கியமாக அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு கல்வி நிறுவனங்களில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே 14 வயது மதிக்கத்தக்க மாணவி உள்ளார். இவர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அண்மை காலமாக மாணவி மிகவும் சோகமாக வலம் வந்தார். யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மாணவியின் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர்கள் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மாணவியின் புகார் அடிப்படையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாலியல் தொந்தரவு குறித்து மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அதை காவல்துறையிடம் தெரிவிக்காமல் மறைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமன் மற்றும் ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியா ஆகியோர் மீது ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications