சேலத்தில் ஸ்டாலினை சந்தித்த கோவை தங்கம்,, திமுகவில் மீண்டும் இணைந்தார்
சேலம்: தமாகா மாநில துணைத்தலைவர் கோவை தங்கம் திமுகவில் இணைந்துள்ளார். சேலம் வந்திருந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
திமுகவில் இருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சி மற்றும் தமாகா சென்ற கோவை தங்கம் பல வருடத்திற்கு பிறகு மீண்டும் திமுகவிலேயே இணைந்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை தலைவர் கோவை தங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர்.
அதிமுக உடன் பேச்சு
கோவை தங்கம் தாமாகவில் இருந்து விலகியது ஏன் என்பதை பார்ப்போம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக அதிமுகவின் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்திய கோவை தங்கம். வால்பாறை தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அதிமுகவே அந்த தொகுதியை தன்வசம் வைத்துக் கொண்டது.
விலகல்
இதனால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார் அத்துடன் கோவை தங்கம். அத்துடன் வால்பாறை சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் வால்பாறையில் போட்டியிடவில்லை.
வால்பாறையில் போட்டியில்லை
இது தொடர்பாக அவர் அண்மைல் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து பேசுகையில், :தமிழக காங்கிரசில் இருந்து விலகி, த.மா.கா.,வில் இணைந்து இத்தனை ஆண்டுகளாக பணிபுரிந்தேன். வாசனுக்காக பல தியாகங்கள் செய்துள்ளேன். ஆனால், அவர் என்னை கைவிட்டு விட்டார். சுயேட்சையாக போட்டியிட நான் தயாரானேன். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, வால்பாறையில் சுயேட்சையாக போட்டியிடவில்லை. வால்பாறை தொகுதிக்கு தேவையானவை குறித்து, என்ன கோரிக்கை வைத்தாலும் அதை நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் தி.மு.க., கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்" என்றார்.
திமுகவில் இணைந்தார்
இந்நிலையில் தமாகாவில் இருந்து விலகிய கோவை தங்கம் திமுகவில் இணைந்துள்ளார். சேலம் வந்திருந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சி மற்றும் தமாகா சென்ற கோவை தங்கம், மீண்டும் தாய்கழகமான திமுகவில் இணைந்திருப்பதாக திமுக கூறியுள்ளது.