எடப்பாடியின் கோட்டையை தகர்க்க பக்கா பிளான்.. ஜெயலலிதா சென்டிமென்டுடன் விஜய் சேலத்தில் பிரச்சாரம்
சேலம்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் சமீபமாக அதிமுக வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. அதிமுக பாணியில் திமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்து தவெக தலைவர் விஜய் களமாடி வருகிறார்.

எடப்பாடியின் ஊரில் விஜய்
திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் கூறினார். ஆனால் பாஜகவை பற்றி அவர் வாய் திறப்பதில்லை. அதிமுகவுடன் சாஃப்ட் கார்னர் காட்டி வந்த விஜய் தற்போது அவர்களை நேரடியாக எதிர்க்க தொடங்கியுள்ளார். அதிமுகவினரை ஊழல் கட்சி, அடிமை கட்சி என்று விமர்சித்த விஜய், அண்மையில் நடைபெற்ற தவெக 3 ஆம் ஆண்டு விழாவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் மற்றும் பலர் என்று அதிமுகவினரின் பெயரை கூட சொல்லாமல் சீண்டினார்.
இதற்கு அதிமுகவினரும் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக விஜய்யை விமர்சித்தார். இந்த விவகாரம் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய்யின் பிரச்சாரத்தை துரிதப்படுத்த தவெக திட்டமிட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி விஜய் வேலூரில் மக்கள் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தள்ளிப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 13 ஆம் தேதி பிரச்சாரம்
இந்நிலையில் வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு சேலம் மாவட்ட தவெகவினர் மனு அளித்துள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதே பகுதியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலிலதா பிரச்சாரம் செய்தார்.
ஜெயலலிதா சென்டிமென்டையே பின் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கும், அதிமுகவுக்கும் விஜய் ஸ்கெட்ச் போடுவதாக கூறப்படுகிறது. அதிமுக தவெக பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சித்து வரும் நிலையில், விஜய்யின் சேலம் விசிட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தவெகவினரின் மனு அடிப்படையில் காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications