200+ டார்கெட்.. ஃபைனல் கேமுக்கு ரெடியா இருங்க.. இளைஞரணியினருக்கு டாஸ்க் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!
சேலம்: 2026 சட்டமன்ற தேர்தல் தான் ஃபைனல் கேம். அதில் நாம் ஜெயிக்க வேண்டும். 234 தொகுதிகளில் 200-ல் திமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். 200 என்பது டார்கெட், இளைஞர் அணியினர் 200-ஐ தாண்டி திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சேலம் மாவட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 விளையாட்டு உபகரண தொகுப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், "2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் தான் உள்ளன. இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
2024 நாடாளுமன்ற தேர்தல் செமி ஃபைனல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் ஃபைனல் கேம். அதில் நாம் ஜெயிக்க வேண்டும். 234 தொகுதிகளில் 200-ல் திமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். 200 என்பது டார்கெட், இளைஞர் அணியினர் 200-ஐ தாண்டி திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்காக இளைஞர் அணி தீவிரமாக செயல்பட வேண்டும்.
உங்களை எல்லாம் சந்திப்பதில் எங்களுக்கு பத்தாயிரம் மடங்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், அதிகமாக உழைக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன். உங்கள் ஆதரவு, அன்பால்தான் எனக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வந்துள்ளது என நம்புகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போது யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கு தெரியும்.
இந்தியாவில் துடிப்புடன் செயல்படும் ஒரு இளைஞர் அணி என்றால் அது திமுக இளைஞரணி தான். 44 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி எப்படி செயல்பட்டதோ அதை எழுச்சியோடு இன்றும் செயல்படுகிறது. திமுக இளைஞரணி சார்பில் 234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் விரைவில் திறக்கப்படும்.
கனமழை பெய்யக்கூடிய காலத்தில் இளைஞர் அணி தயாராக இருக்க வேண்டும். எப்போதும் மக்களுடன் இருக்கும் ஒரு இயக்கம் தான் திமுக. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது மழைக்காலத்திலும், பேரிடர் காலத்திலும் ஒரு அதிமுகவினரை கூட பார்க்க முடியாது.
திமுக இளைஞர் அணி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும். கடந்த 9 தேர்தல்களில் திமுகவிற்கு தொடர் வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். இது தொடரவேண்டும்" எனப் பேசினார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சட்டமன்றத் தொகுதி தோறும் கலைஞர் நூலகங்களை திறக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியதோடு, என் உயிரினும் மேலான பேச்சுப்போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்புற செய்த அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை பாராட்டினோம்.
ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் நியமனங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது தொடர்பான தகவல்களை எடுத்துரைத்தோம். மேலும், வடகிழக்கு பருவமழை நேரத்தில் இளைஞரணியினர் அரசு மற்றும் மக்களுக்கு பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
முக்கியமாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்களுடன் இணைந்து இப்போதே மேற்கொண்டிட வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினோம். 2026-ல் 200-க்கும் அதிகமான இடங்களில் கழக அணி வெல்ல இளைஞரணியினர் ஓயாது உழைப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications