அமைச்சர் பெரியகருப்பன் தொகுதியில் போட்டியிட ஆள் இல்லையா? போட்டியின்றி ஜெயித்த அதிமுக வேட்பாளர்!
சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்பத்தூரில் உள்ள ஒரு பேரூராட்சியில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியிருக்கிறார் அதிமுக வேட்பாளர் தெய்வானை.
திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பள்ளத்தூர் பேரூராட்சியில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
இதனால் ஆளுங்கட்சியான திமுகவில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட ஆள் இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பல இடங்களில் போட்டியின்றி பலர் கவுன்சிலர்களாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளரை தவிர திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

வெற்றி உறுதி
இதனால் அதிமுக பெண் வேட்பாளர் தெய்வானையின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது எதிர்கோஷ்டியினர் திமுக தலைமைக்கு புகார் அனுப்பி வருகின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கூட வேட்பாளரை நிறுத்துவதில் கோட்டை விட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

பேச்சுவார்த்தை
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடப்பங்கீட்டை சுமூகமாக முடிப்பதற்கே அமைச்சர் பெரியகருப்பனுக்கு நேரம் போதவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டில் திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யாததன் காரணம் குறித்த விவரம் எதுவும் இல்லை.

அதிமுக தரப்பு
இதனிடையே சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் அதிமுக பெண் வேட்பாளர் தெய்வானை போட்டியின்றி தேர்வாவதை, அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி என்பதால் இது அக்கட்சி தலைமையின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications