அஜித்குமார் கொலை வழக்கு.. காவல்துறை வாகன டிரைவர் 6வது நபராக கைது.. அதிரடி காட்டிய சிபிஐ
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித்குமாரை நகை திருட்டு குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கினர். இதில் அவர் இறந்தார். அஜித்குமாரை தாக்கிய தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டையே இந்த உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 வது நபராக போலீஸ் வாகன டிரைவரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் அஜித் குமார். இவருக்கு வயது 27.

கடந்த ஜூன் 27 ம் தேதி சிவகாமி என்பவர் தனது மகள் நிகிதாவுடன் காரில் கோவிலுக்கு வந்தார். சிவகாமியால் நடக்க முடியாது. இதனால் அவருக்கு வீல்சேர் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வேளையில் அஜித் குமாரிடம் கார் பார்க் செய்யும்படி சாவியை கொடுத்து சென்றார். அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாது. இதனால் அவர் இன்னொருவரை உதவிக்கு அழைத்து காரை பார்க் செய்துவிட்டு சாவியை ஒப்படைத்தார்.இந்த வேளையில் காரில் இருந்த 9.5 சவரன் நகை மற்றும் ரூ.2,500 காணவில்லை என்று நிகிதா கூறினார். இதுதொடர்பாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அஜித் குமாரை பிடித்து விசாரித்தனர். எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை தனிப்படை போலீசார் கோவிலின் மாட்டு தொழுவத்தில் வைத்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் இறந்தார். மொத்தம் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றது.
போலீசாரின் தனிப்படை பிரிவில் பணியாற்றிய ஐந்து காவலர்களான கண்ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் அவ்வப்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் 6வது நபராக காவல்துறை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அஜித்குமார் வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சிபிஐ அவரை கைது செய்தது. விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications