மருது பாண்டியர்கள் குருபூஜை.. அக்.27ல் சிவகங்கையில் விடுமுறை.. 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு
சிவகங்கை: விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் கடைபிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள். ஆங்கிலேயர்களை எதிர்க்க தேசிய அளவில் அணி உருவாக்கியபோது இவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேயர்கள் ஆளாகினர்.

சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படை தளபதியாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள் மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள் 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் இதனை முறியடித்தனர்.
1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 3 நாட்கள் கழித்து இவர்களது சடலங்கள் இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் மணிமண்டபம் மற்றும் திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள நினைவு தூண் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விழா நிகழ்ச்சிகள் குறித்து மருது பாண்டியர் வாரிசுதாரர் குழு தலைவர் ராமசாமியிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து பாதுகாப்பு குறித்தும், வாகனம் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
மருதுபாண்டியர்கள் நினைவாக காளையார் கோயிலில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் மணி மண்டபத்திற்கு வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் 27ஆம் தேதி குரு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் காளையார்கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குருபூஜையையொட்டி காளையார் கோவிலுக்கு வரும் கார்கள் கண்காணிக்கப்படும் என்றும், கொண்டாட்டம் என்கிற பெயரில் கார்கள் மீதேறி பயணிப்பது, தொங்கிக்கொண்டு பயணிப்பது என விதி மீறல்களில் ஈடுபட்டால் கார் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
அக்டோபர் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையிலும் அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications