ஆய்வு கூட்டத்தில் தவறான தகவல்.. உதயநிதி பார்த்த பார்வை! மறுநாளே சிவகங்கை அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட்
சிவகங்கை: அமைச்சர் உதயநிதி சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், அங்கு அவர் பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே அங்கு ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்ட போது, அதில் அதிகாரி ஒருவர் தவறான தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இப்போது முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார். இந்தச் சூழலில் அமைச்சர் உதயநிதி இப்போது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்டமாக நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்திற்குச் சென்ற அமைச்சர் உதயநிதி, அங்கு நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு ரூ.2,500 கோடி மதிப்பிலான சுழல் நிதி கடன் உதவியை வழங்கினார். மேலும், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அதிரடியாக ஆய்வும் செய்தார். அதைத் தொடர்ந்து முறையாக பணியாற்றவில்லை எனச் சொல்லி 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதன் பிறகு சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்ற உதயநிதி, அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார். இதற்கிடையே மதுரையைத் தொடர்ந்து சிவகங்கையிலும் உதயநிதி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
உதயநிதி பங்கேற்ற கூட்டத்தில் அவரிடம் தவறான தகவல் அளித்தற்காக பிடிஓ எனப்படும் வட்டார வளர்ச்சி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை சென்றிருந்த அமைச்சர் உதயநிதி அங்குத் திருப்பத்தூரில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார்.
’முதல்வன்’ எஃபெக்ட்..மதுரையில் கண்சிவந்த அமைச்சர் உதயநிதி! தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகள்..என்னாச்சு?
இதற்கிடையே இன்றைய தினம் அந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சோமதாஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தவறான தகவலை அளித்ததாக சோமதாஸ் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆய்வுக் கூட்டத்தில் மக்களின் புகார்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயநிதி கேள்வி கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு சோமதாஸ் பதிலளித்துள்ளார். இருப்பினும், சோமதாஸ் உண்மை தகவல்களுக்கு மாறாகத் தவறான தகவல்களை அளித்தாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே சோமதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் கோப்பை–2024 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் கலந்து கொள்வது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி, "பங்கேற்பது அவர்களது இஷ்டம். அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்" என்று மட்டும் பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.












Click it and Unblock the Notifications