பாஜக எச்.ராஜா அவதூறு பேச்சு- சிவகங்கை போலீஸ் வழக்கு- உயர்நீதிமன்ற எச்சரிக்கையால் இனி தப்ப முடியாது?
சிவகங்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தந்தை பெரியார் மற்றும் பெண்களை இழிவாக விமர்சித்து பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது சிவகங்கை போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கடந்த 19-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய எச்.ராஜா அனைவரும் திடுக்கிடும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவுபடுத்தி பேசினார். அதேபோல தந்தை பெரியார் மற்றும் பெண்களையும் அவதூறாகப் பேசினார். இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் கருத்துகளை முன்வைத்தார் என காளையார்கோவில் போலீசில் திமுக நிர்வாகிகள் புகார் கொடுத்தனர்.

காளையார்கோவில் போலீஸ் வழக்கு: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். எச்.ராஜா பேசிய பேச்சுகளை ஆய்வு செய்த போலீசார் கடந்த 21-ந் தேதி காளையர்கோவில் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்தனர். மத மோதல்களை உருவாக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட காரணங்களுக்காக எச்.ராஜா மீது மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் காளையார்கோவில் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சிவகங்கை போலீசும் வழக்கு பதிவு: இந்நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை போலீசில் சிவகங்கை நகர திமுக செயலாளர் துரை ஆனந்த் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிவகங்கை நகர போலீசார் இன்று எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்தனர். எச்.ராஜா மீது மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் சிவகங்கை நகர போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை: எச்.ராஜா மீது இதேபோல பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும் அவர் கைது செய்யப்படவில்லை. தந்தை பெரியார் சிலை உடைப்பு, அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை இழிவுபடுத்தி பேசியது, கனிமொழி எம்.பி குறித்து அவதூறாக பேசியது என எச்.ராஜா மீது மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா மனுத் தாக்கல் செய்திருந்தார். எச்.ராஜவின் இந்த கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ், எச்.ராஜா இதேபோல் பேசுவது முதல் முறையல்ல. அவருடைய பேச்சு தனிநபர்களை மட்டுமல்ல அனைவரையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதால் எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது; அவர் மீதான வழக்குகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவதூறாகவும் இழிவாகவும் பேசி வழக்குகளை வாங்கி இருக்கிறார் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications