வாரிசு இல்லாதவங்க புலம்புறாங்க.. கருணாநிதி பேச்சு + ஸ்டாலின் நிர்வாகம் = உதயநிதி: அமைச்சர் பூரிப்பு
சிவகங்கை: கருணாநிதியை போல பேச்சாற்றல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல நிர்வாக திறமை என அனைத்து தகுதிகளும் உதயநிதி ஸ்டாலினிடம் இருக்கிறது என்றும், வாரிசு இல்லாதவர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதை பார்த்து புலம்புவதாகவும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்க நாட்டு விழாவில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களும் பாராட்டக்கூடிய வகையில் நான் கூட்டுறவு துறை அமைச்சராக சிறப்பாக பணி ஆற்றுவேன்.

பால் விலை உயர்வு
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேவைக்கு ஏற்ப அரசு கலை கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவிர்க்க முடியாத காரணத்தின் காரணமாக, நுகர்வோருக்கு பாதிப்பு அடையாத வகையில் மிகக் குறைவான அளவிலேயே பால் விலை ஏற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை பெட்ரோல் விலை ஏற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்." என்றார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு
அப்போது அவரிடம் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் பெரிய கருப்பன், "அரசு திட்டங்களை நிறைவேற்றும்போது குறை, நிறைகள் இருக்கும்.

உதயநிதியின் தகுதி இருக்கிறது
முதலமைச்சரின் ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கருணாநிதியை போல் பேச்சாற்றல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைபோல் நிர்வாக திறமை என அனைத்து தகுதிகளும் உதயநிதி ஸ்டாலினிடம் இருக்கிறது. தகுதியும் திறமையும் இருந்த காரணத்தால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாரிசு இல்லாதவர்கள் புலம்புகிறார்கள்
வாரிசு என்று கூறிக்கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது. இதனை வாரிசு இல்லாதவர்கள் பார்த்து புலம்புகின்றன.
அதிமுக 4 அணிகளாக பிரிந்து அங்கும் வாரிசுகளுக்கான போட்டியே நடைபெற்று வருகிறது. அதிமுகவினர் திமுகவைப் பார்த்து வயிற்றெரிச்சலில் உள்ளார்கள்." என்று தெரிவித்தார்.

பரிந்துரைத்த ஸ்டாலின்
சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுகவினர் தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து இதற்கு அமைதியாக இருந்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார்.

பதவியேற்ற உதயநிதி
இந்த பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 14 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் பதவிப் பிரமானமும், ரகசிய காப்புப் பிரமானமும் செய்தி வைத்தார். இதனை தொடர்ந்து பலரும் எதிர்பார்த்ததை போன்றே அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications