‘நாங்க தனித்து தான் போட்டி.. வரவங்க வரலாம்.. போலாம் ரைட்’ – 2026 ரூட் கிளியர் செய்த சீமான்
சிவகங்கை: 2026 சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேச்சு உள்ளது. இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "தனித்து நின்று திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியுமானால் பிறகு எதற்காக கூட்டணி வைத்துள்ளீர்கள். இப்போது ஆட்சியில் பங்கு இல்லை என்று சொல்பவர்கள், மத்தியில் ஆட்சியமையும் போது மட்டும் ஆட்சியில் பங்கேற்றார்கள் தானே. அது எப்படி. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தர முடியாதவர்கள் ஆண் மகனாக இருந்தால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்.

இதற்கு முன்பு மோடி இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார். அப்போது அதிகாரத்தில் பங்கு கொடுத்தாரா. இப்போது சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இல்லாவிடின் ஆட்சியை நடத்த முடியாது என்று ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்துள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் பழிவாங்கப்படுகிறார். அதானி பெயரில் மோடிதான் முதலீடு செய்துள்ளார் என்று பேசியதற்கு இந்த வழக்கை சந்திக்கிறார். அவரின் நண்பர் தான் அமலாக்கத்துறையில் இருக்கிறார். அவர் கொடுத்த தகவலை எடுத்து இவர் பேசிவிட்டார். அதே கருத்தை நான் சொல்கிறேன். அதானி ஒன்றுமில்லை. மோடிதான் எல்லாம். இப்போது என் மீது நடவடிக்கை எடுங்கள்.
என்னிடம் ஒன்றுமில்லை. அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதனால் நடவடிக்கை எடுக்கின்றனர். காலம் காலமாக தமிழகத்தில் மது விலக்கு அமலில் இருந்தது. கருணாநிதி தான் மதுக்கடை திறந்தார். கொரோனா காலத்தில் மதுக்கடைகள் எப்படி மூடப்பட்டிருந்தது. அது எப்படி சாத்தியமானது. அப்போது குடிக்காமல் யாராவது இறந்தார்களா.
மது குடிப்பது, வாக்குக்கு பணம் வாங்குவது எல்லாவற்றையும் கலாசாரம் ஆக்கிவிட்டீர்கள். எல்லோரும் செய்வதால் அது நல்லதாகிவிடாது. இங்கு மக்கள் முதலமைச்சர்களை தேர்வு செய்கிறீர்களா. சாராய அதிபர்களை தேர்வு செய்கிறீர்களா. முதலீட்டை கொண்டு வருவது தரகு வேலை. அது தலைமை வேலை கிடையாது.
கேட்டால் அன்னிய முதலீடு என்று சொல்கிறார்கள். தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்று அந்த நிறுவனங்கள், வேளாண்கன்னி கோயிலில் வைத்து சத்தியம் செய்துள்ளார்களா. மோடி உலகளவில் செய்ததை. இவர்கள் இந்திய அளவில் செய்தனர். இப்போது இவர்களும் உலகளவு சென்றுவிட்டனர்.
பணம் மட்டும் கொடுக்கவில்லை என்றால் என்னை வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கிறீர்களா. தனித்து நின்று நாங்கள் வாங்கிய வாக்கை, காங்கிரஸ் கட்சியால் வாங்க முடியுமா. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. அப்போது பேசுவோம்.
என்னை சின்னமணுர்ல கேட்டாக.. மருதூர்ல கேட்டாக. மயிலாடுதுறைல கேட்டாக என்று கோவை சரளா போல பேசத் தயாராக இல்லை. என்னுடைய இலக்கு தனி. நான் தனித்து போட்டியிடுகிறேன். திரும்பத் திரும்ப கேட்கக் கூடாது. என்னோடு கூட்டணியில் சேரலாமா என்று மற்றவர்கள் தான் யோசிக்க வேண்டும்.
மண் மீதும், மக்கள் மீதும் பேரன்பு தான் கோபமாக வெளிப்பட்டுள்ளது. கோபம் இல்லை என்றால் நான் கோடம்பாக்கத்தில் உட்கார்ந்து படம் எடுத்து கொண்டிருப்பேன். என் மீது 138 வழக்குகள் உள்ளன. அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு உள்ளது. என் அம்மாவுடன் பேசுவதை கூட ரெக்கார்டு செய்கிறார்கள். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் தான் நான் அரசியலில் பணியாற்றி கொண்டிருக்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications