இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகள் மீது குண்டுவீச்சு: பதட்டம்
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் மாவை சேனாதிராஜா, ஸ்ரீகாந்தா ஆகியோரின் வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும் இடையே தான் கடும் போட்டியாக உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சி தனித்து போட்டியிடுகின்றது. தேர்தல் பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.
இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோரின் வீடுகள் மீது மர்ம நபர்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்களில் இருவரின் வீடுகளும் பெரும் சேதம் அடைந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தால் தமிழர்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications