"இலவசங்களை வாரி இறைத்தால்... இலங்கை கதிதான் நமக்கும் ஏற்படும்!" எச்சரிக்கும் தமிழ்நாடு கள் இயக்கம்
ராமநாதபுரம்: இலங்கையில் இப்போது மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இப்போது பெரிய குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜகபக்ச மாளிகையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், விரைவில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசு அமையும் கூறப்படுகிறது.

இலங்கை
இன்னும் சில நாட்களில் அதிபர் கோத்தபய ராஜக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க சில மாதங்கள் பிரதமராக இருந்த போது, இலங்கை நிலையை மேம்படுத்த அவர் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்தார். சர்வதேச நிதியம் தொடங்கிப் பல இடங்களில் அவர் கடன் பெற முயன்றார். இருப்பினும், எதுவும் நிலைமை மேம்படுத்தவில்லை.

பொருளாதார நிதி நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியே அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. அங்குக் கடந்த டிசம்பர் மாதமே முதலே பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் செல்ல தொடங்கியது. கொரோனா பரவல், கெமிக்கல் விவசாயத்திற்குத் தடை விதித்தது என பல்வேறு விஷயங்கள் இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. அனைத்தையும்விட இலங்கை உலக நாடுகளிடம் இருந்து அதிகளவில் கடன் வாங்கியதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இலவசம்
இந்நிலையில், இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாவட்டம் வந்த தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி, "ஆட்சியை தக்க வைத்சுத் கொள்ள இலவசங்களை வாரி இறைக்கின்றனர். இதே நிலை வரும் காலத்தில் தொடர்ந்தால் நிச்சியம் நமக்கும் இலங்கையில் ஏற்பட்ட ஒரு நிலை தான் நமக்கு ஏற்படும். இதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

பேட்டரி வாகனம்
இப்போது நமது நாட்டில் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதேபோல விவசாயிகளுக்கும் கூட பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும். சிலர் இயற்கை விவசாயத்திற்கு நாம் அனைவரும் மாற வேண்டும் என்கிறார்கள். ஆனால் உடனே அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாறக்கூடாது. அப்படி மாறினால் உணவுப்பஞ்சம் ஏற்படலாம். ஆனால், படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநாடு
இப்போது நாம் பின்பற்றும் கல்வித் திட்டம் கறிக்கோழியை வளர்ப்பதுபோல உள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் 5 முதல் 7 வரை வாழ்வுரிமை மாநாடு, வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது. மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் இதில் பங்கேற்க உள்ளனர். இதில் தேவையற்ற இலவசங்களைத் தவிர்க்கவும், விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
Recommended Video

ரூ.10 கோடி பரிசு
நாட்டின் பிற மாநிலங்களில் கள் இறக்கவும் விற்கவும் தடையில்லை. கள் இறக்குவது, பருகுவது மக்களின் உரிமை. இதற்காகத் தொடர்ந்து போராடுகிறோம். கள் இறக்கத் தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம். அனுமதி அளிக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 16ஆம் தேதி அசுவமேத யாகம் நடத்தப்படும். அப்போது குதிரையைத் தடுத்து நிறுத்திக் கள் போதைப்பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications