மிஸ்டர் ராஜபக்சே.! "மோடி மந்திரம்" வேலை செய்கிறது போல... கேட்பது மனோ கணேசன்
கொழும்பு: அரசியல் சாசன திருத்தத்தின் 13வது பிரிவையே பேசாதீர்கள் என்று சொன்ன ராஜபக்சே அரசு இப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தால் அதே 13வது திருத்தத்தை ஏற்றுக் கொண்டு போலீஸ் அதிகாரத்தை மட்டும் தர முடியாது என சொல்கிறது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் மனோ கணேசன் நேற்று கூறியதாவது:

இலங்கையின் உள்ளேயே நமது பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல முயற்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் தமிழர்களை வெளிநாடுகளை நோக்கி ராஜபக்சே அரசு தான் தள்ளுகிறது. உள்நாட்டு பிரச்சினைக்கு உலக நாடுகளிடம் தீர்வை கோருகிறோம் என தமிழர்களை இனி எவரும் குறை கூற கூடாது.
ஐக்கிய நாடுகள் சபையையும், இந்தியாவையும் நோக்கி நாம் செல்வதற்கு ராஜபக்சேவின் முட்டாள் அரசாங்கம்தான் காரணம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
"இலங்கை நாட்டு பிரிவினையை எதிர்க்கிறோம்; இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் சாசன திருத்தம் 13ஐ நடைமுறைப்படுத்துங்கள்" என்று இந்திய பிரதமர் மோடி கடுமையாக கூறிவிட்டார். அத்துடன் அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இருகரங்கூப்பி வரவேற்று உரையாடியுள்ளார்.
இருவரும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பற்றியும் உரையாடியுள்ளனர். இதன்மூலம் ஒருநாட்டு பிரதமர் தனது நாட்டின் இன்னொரு கட்சியை சார்ந்த ஒரு மாநில முதல்வரை எவ்விதம் நாகரீகமாக நடத்த வேண்டும் என்ற பாடத்தையும் இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி கற்று கொடுத்துள்ளார்.
அரசியல் சாசன திருத்தம் 13ஐ பற்றி பேசவே பேசாதீர்கள். பேச வேண்டுமானால் நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு வாருங்கள் என்று அகம்பாவத்துடன் பேசியவர்கள், இன்று 13ஆம் திருத்தத்தில் போலீஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை நடைமுறைப்படுத்த செய்ய தயார் என சொல்கிறார்கள்.
இனி நாளை இன்னொரு மோடி சந்திப்புக்கு பிறகு போலீஸ் அதிகாரத்தையும் தருகிறோம் என சொன்னாலும் ஆச்சரியமில்லை.
உள்நாட்டில் நாம் கெஞ்சினாலும் சட்டத்தில் உள்ள உரிமையைகூட வழங்க மாட்டீர்கள். ஆனால், வெளிநாட்டில் பலம் பொருந்தியவர்கள் அழுத்தம் கொடுத்தால் இணங்குகிறீர்கள். ஆகவேதான் கேட்கிறேன், மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா?
இவ்வாறு மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications