தமிழ், சிங்களம், ஆங்கிலம்.. அடுத்தடுத்து டிவீட்டும் மோடி... இலங்கையிலிருந்து!
புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்க 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிகள் மோடி செயலியிலும், டுவிட்டர் பக்கத்திலும் படு ஸ்பீடாக அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.
கொழும்பு : வெசாக் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக கொழும்பு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது நிகழ்ச்சிகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வருகிறார்.
கொழும்பில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை திறப்பு மற்றும் தமிழர்களை சந்தித்துப்பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் இலங்கை சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் நேற்று எழுதி உள்ள கருத்தில் ''2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இலங்கை செல்கிறேன். எங்களின் வலுவான உறவுக்கு இது அடையாளம். எனது பயணத்தின்போது, கொழும்பில் வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறேன். புத்த மத தலைவர்களுடன் கலந்துரையாடுகிறேன். அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோருடன் இந்த விழாவில் கலந்துகொள்வதை கவுரவமாக கருதுகிறேன்'' என்று கூறி இருந்தார்.
இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள திக்கோயா மருத்துவமனையை தொடங்கி வைத்து, இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாட உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

குழந்தைகள் வரவேற்பு
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொழும்பு சென்ற பிரதமர் மோடியை அந்த நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வரவேற்றார். இரண்டு சிறுவர்கள் பூங்கொத்து கொடுக்கும் போட்டோவை தனது டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் போட்டு ‘‘கொழும்பை வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கே சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன்'' என தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் டுவீட்டியும் உள்ளார்.
|
புத்தர் கோவிலில் பிரார்த்தனை
வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் மோடி, நேற்று இரவு இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயுடன் கொழும்பு நகரில் உள்ள 120 ஆண்டு பழமையான கங்கராமய்யா கோவிலின் அங்கமாக திகழ்கிற சீமா மாலகா புத்த கோவிலுக்கு சென்று, வெசாக் தின கொண்டாட்டத்தின் பாரம்பரிய வழக்கப்படி, விளக்கேற்றி வழிபட்டார். இந்தப் புகைப்படங்களும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களுடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசுகின்றனர்.

ஈழத் தமிழர்கள் குறித்துப் பேசுவார்களா
இந்த பேச்சுவார்த்தையின் போது உள்நாட்டுப் போரின் போது காணாமல் போன தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications