”கொலையாளி” வேலைக்கு ஆட்கள் தேவை- தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆள் தேடும் இலங்கை
கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 51 சதவீதம் நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.
அதனை சட்ட வடிவிலும் செயல் முறையிலும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்று இலங்கை.
மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் கைதிகளை தூக்கிலிடும் வேலைக்காக புதிய கொலையாளியை தேடி வருகிறது.

ராஜ துரோக குற்றம்:
இலங்கையை வெள்ளையர் ஆண்டு வந்த 1815-ம் ஆண்டு வாக்கில் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தவர்களுக்கு ராஜ துரோக குற்றச்சாட்டின் பேரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்து அப்போதைய பிரதமர் பண்டாரா நாயகே உத்தரவிட்டார்.

தூக்கு தண்டனை சட்டம்:
வன்முறை தாக்குதலில் பண்டாரா நாயகே கொல்லப்பட்ட பிறகு 1959-ல் மீண்டும் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த சட்டம் 2004-ம் ஆண்டு நீதிபதி சரத் அம்பேப்பிட்டியா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை உயிர்ப்புடன் உள்ளது.

தூக்கு மர நிழல்:
கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கையில் யாரும் தூக்கிலடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 405 கைதிகள் தூக்கு மர நிழலில் சிறைக்குள் இளைப்பாறி வருகின்றனர். கைதிகளை தூக்கிலிடும் கொலையாளிகள் பணி ஓய்வு பெற்று செல்வதால் அந்த வேலைக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய முடிவெடுத்த இலங்கை சிறைத் துறை கடந்த ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

கொலையாளி வேலைக்கு விண்ணப்பம்:
இந்த வேலைக்கு விண்ணப்பித்த 176 பேரில் இறுதியாக 3 பேர் தேர்வு செய்தது. அவர்களில் இருவர் தேர்வின் போது வந்ததோடு சரி நியமன உத்தரவுக்குப் பின்னர் மாதங்கள் ஆகியும் வேலைக்கு திரும்பவே இல்லை. இதனால் தேர்வுப் பட்டியலில் இருந்த மூன்றாவது தகுதியான நபரை வரவழைத்த சிறைத்துறை அதிகாரிகள் தொழிலின் "நெளிவு சுளிவு" களைப் பற்றி அவருக்கு ஒரு வாரம் பயிற்சி அளித்தனர்.

அதிர்ச்சி அடைந்து ஓடிய ”கொலையாளி” நபர்:
தூக்கு மேடையை சுற்றிக்காட்டி தூக்கு கயிறு எவ்வாறு கழுத்தில் இறுகும் என்று விளக்கிக் கூறியபோது அதிர்ச்சி அடைந்த அந்த நபரும் "இந்த வேலை எனக்கு வேண்டாம்" என்று கூறி ஓட்டம் பிடித்தார். இதனால் புதிய கொலையாளியை தேர்வு செய்யும் முயற்சியில் இலங்கை சிறைத்துறையினர் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

மொதல்ல தூக்கு மேடையை சுத்தி காட்டனும்:
இந்த முறை வேலைக்கு வரும் நபருக்கு முதலில் தூக்கு மேடையை சுற்றிக் காட்டவும் பார்த்து விட்டு தாக்குப்பிடிக்கும் நபருக்கு மட்டும் பயிற்சி அளிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications