முல்லை தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்த இலங்கை மீனவர்கள்!
கொழும்பு: முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை மீனவர்கள் சிறை பிடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 8 பேர் இலங்கை மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர். முல்லைத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிறைப்பிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், ரங்கநாதன் (வயது 29), ஆனந்தவேலு (50), லட்சுமணன் (40), வினோத் (28), பாலமுருகன் (35), சித்திரவேலு (28), சாமிநாதன் (25), கண்ணன் (27) என தெரியவந்துள்ளது.
அக்கரைப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர்கள் கடந்த 2ம் தேதி கடலுக்கு சென்றிருந்தனர்.
இவர்கள் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, மீனவர்களையும், அவர்களது படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் நாகை மீனவர்களை இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து வந்த நிலையில், இப்போது அந்த நாட்டு மீனவர்களும் மடக்கிப்பிடித்து ராணுவத்தினரிடம் ஒப்படைக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications