இலங்கை சென்ற ராஜீவ் கொலையாளிகள் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்! துருவி துருவி போலீஸ் விசாரணை?
கொழும்பு: இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸிடம் காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் விமான நிலையத்திலிருந்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு இலங்கை போலீஸார் அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவிலிருந்து அவர்கள் மூவரும் தாய்நாடான இலங்கைக்கு சென்றுள்ளனர். அங்கு காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றது எப்படி என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது தற்கொலை படை தாக்குதலின் போது கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிசந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது கருணை மனு அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனினும் அவர்களது தண்டனைக் காலம் முடிவடைந்தும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இப்படியே 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதில் திருச்சி முகாமில் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இலங்கை செல்ல இந்திய அரசிடம் அனுமதி கேட்டனர். அப்போது இலங்கை துணை தூதரகம் தரப்பில் பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்து அதுவும் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து இலங்கை செல்ல இவர்கள் 3 பேருக்கும் மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து திருச்சி முகாமில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மூன்று பேரும் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து இன்று காலை 10மணிக்கு கொழும்பு செல்லும் விமானத்தில் மூவரையும் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இலங்கை சென்ற மூவரையும் காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் மூன்று பேரையும் இலங்கை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என இந்தியாவின் புலனாய்வு அமைப்பான சிபிஐ குற்றம்சாட்டியுள்ள நிலையில் முன்னாள் பிரதமரை படுகொலை சம்பவத்தில் இவர்களுடைய பங்கு என்ன என்பது குறித்தெல்லாம் இலங்கை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications