மைத்ரிபால அமைச்சரவையில் இணைய மாட்டோம்.. தமிழ் தேசிய கூட்டமைப்பு
கொழும்பு: தமிழர்களின் கோரிக்கையை மைத்ரிபால சிறிசேன ஏற்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும். அதுவரை அவரது அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. சுமந்திரன் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 4 முதல் 5 அமைச்சர் பதவி வரை தரப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார் சுமந்திரன்.
இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன வெள்ளிக்கிழமை பதவியேற்றார். மைத்ரி பால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதலில், தமிழர்களின் கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.