ஆஸி.யில் கொரோனா ஜெட் வேகம்.. லாக்டவுனை மீறும் மக்களை கட்டுப்படுத்த ராணுவ உதவி கேட்கும் மாகாண அரசு!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிப்பதை கண்காணிக்க ராணுவ உதவி கேட்கப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையை மிக எளிதாக சமாளித்த ஆஸ்திரேலியா, டெல்டா வைரஸ் மாறுபாடு காரணமாக கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கணிசமாக இருந்தாலும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னியில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
பைக் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து.. உயிரிழந்த இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
சிட்னியில் அதிக பாதிப்பு
சமீபத்திய சில வாரங்களில் சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் டெல்டா வைரஸ் மாறுபாட்டை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா போராடி வருகிறது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் மட்டும் 8 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. சிட்னியில் மிக கடுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
போலீசுக்கு சவால்
போக, போக நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில். இந்த ஹாட்ஸ்பாட்களில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டிய நிலை உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை மீறாதவாறு சிட்னியில் உள்ள 60 லட்சம் மக்களை கண்காணிப்பது போலீசாருக்கு மிகவும் சவாலாக இருக்கிறது.
ராணுவ உதவி
இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க, உதவி புரிய 300 இராணுவ வீரர்களைக் கேட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. வரவிருக்கும் வாரத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பதால் அந்த நடவடிக்கைக்கு உதவும் வகையில் ராணுவத்தை அனுப்பி வைக்கும்படி பிரதமரிடம் முறையான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் கமிஷனர் மிக் புல்லர் கூறியுள்ளார்.
காரணம் என்ன?
ஆனால் ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் பாதுகாப்பு மந்திரி பீட்டர் டட்டனின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணிகள் மிக மெதுவாக நடப்பதும் டெல்டா வைரஸ் பரவ முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மெதுவான தடுப்பூசிக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் ஏற்கனவே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.