கிறிஸ்துமசுக்காக மரம் நடப்போகும் “100 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்” – கோவையில் புதிய முயற்சி!
கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 100 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கோவையில் இன்று துாய்மைப் பணியை மேற்கொண்டு மரக்கன்றுகளை நடவுள்ளனர்.
கோவை நகரிலுள்ள சமூக அமைப்புகள்,தன்னார்வ அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து"டாஸ்க்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில், துாய்மைப் பணி, நகர மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், மதநல்லிணக்கத்துக்கான பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.கிறிஸ்துமஸ் பண்டிகையை வித்தியாசமாகக் கொண்டாட, இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

கோவை கரும்புக்கடை சேரன் நகரில் அரசுக்குச் சொந்தமான மைதானம் உள்ளது. அந்த மைதானத்தை, "சான்டா கிளாஸ்" எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்த 100 மாணவ, மாணவியர் துாய்மை செய்துஅப்பகுதி மக்களுடன் சேர்ந்துகிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடவுள்ளனர். இன்று காலை 9.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இவர்களுடன், கோவை அரசு கலைக்கல்லுாரியின் என்.எஸ்.எஸ், மாணவர்களும் இணைந்து, இந்த துாய்மைப் பணியை மேற்கொள்ளவுள்ளனர். மரக்கன்றுகள் நடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"சிறுதுளி", "ராக்", "லீட் இந்தியா -2020", ஜமாத்-இ இஸ்லாமி ஹிந்த், அனைத்துலக சகோதரத்துவ சங்கம், "ரிதம்" மற்றும் யூத் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளும், இந்த நிகழ்ச்சியில் கைகோர்க்கவுள்ளன.
துாய்மையான பாரதத்தை உருவாக்குவதற்கான இந்த சிறு முயற்சியில், கோவை மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என டாஸ்க் தலைவர் குர்தீப் சிங் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications