அடிபட்டவர்களை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நர்ஸ் படுகாயம்
வாகன விபத்தில் காயமடைந்தோரை மீட்கச் சென்ற 108 ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது. இதில் ஆம்புலன்ஸில் சென்ற நர்ஸ் படுகாயம் அடைந்தார்.
நாகர்கோவில்: விபத்தில் அடிபட்டவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் நர்ஸ் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோவில் அருகேஎ இறச்சிகுளத்தில் இருந்து நாகல்காட்டுக்கு செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கினார். இதுபற்றி 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கியவரை மீட்க நாகல்காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த ஆம்புலன்ஸ்சை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராமராஜன் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் கடுக்கரை ஆவடி நகரை சேர்ந்த பயிற்சி பெற்ற நர்ஸ் சுதா உடன் சென்றார். ஆம்புலன்ஸ் வரங்காடு- ஈசாந்திமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையில் ஓரத்தில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராமராஜன், சுதா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த ராமராஜன், சுதா ஆகிய இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதே சமயம் மோட்டர் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த நபர் வேறு ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் அடிபட்டவரை மீட்கச் சென்ற ஆம்புலன்சே விபத்தில் சிக்கி இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications