ஜெ. இறந்தது எத்தனை மணிக்கு? அப்பல்லோ பொய்யை அம்பலப்படுத்திய ஓபிஎஸ்
பன்னீர்செல்வம் கூறுவதை பார்த்தால், ஊடகங்களுக்கு கிடைத்த தகவலை போலவே பன்னீர்செல்வத்திற்கும் ஜெயலலிதா மாலையிலேயே மறைந்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நேரம், டிசம்பர் 5ம் தேதி, மாலை 4.30 மணியா அல்லது இரவு 11.30 மணியா என்ற சந்தேகத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு எழுப்பியுள்ளது.
சென்னை எழும்பூரில் இன்று உண்ணாவிரதம் இருந்த ஓ.பன்னீர்செல்வம் நிறைவாக பேசுகையில் இந்த குண்டை தூக்கி போட்டார். ஜெயலலிதா மரணமடைந்ததாக, 2016, டிசம்பர் 5ம்தேதி, மாலை 6.30 மணிக்கு தனக்கு தெரிவிக்கப்பட்டதாக பேச்சின்போது அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதா மாலை 4.30 மணியளவில் மறைந்துவிட்டதாகவும், தனக்கு தகவல் 2 மணி நேரம் தாமதமாகதான் கொடுக்கப்பட்டதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எனவே, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்படும் முன்பாக தன்னிடம் அதுகுறித்து தெரிவித்து அனுமதி பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இரு தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து அனுமதி பெறப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால் அதை மறுக்கும் பன்னீர்செல்வம், அந்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.
டிசம்பர் 5ம் தேதி மாலையிலேயே, ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக டிவி சேனல்கள் உட்பட பல ஊடகங்களும் செய்தியை பிரேக் செய்தன. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை உடனடியாக அதை மறுத்தது. இரவு 11.30 மணிக்குத்தான் அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதா இறந்ததாக கூறி, நள்ளிரவில், அதுகுறித்த விவரத்தை வெளியிட்டது.
பன்னீர்செல்வம் கூறுவதை பார்த்தால், ஊடகங்களுக்கு கிடைத்த தகவலை போலவே பன்னீர்செல்வத்திற்கும் ஜெயலலிதா மாலையிலேயே மறைந்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதில் எது உண்மை என்பதே இப்போது கேள்விக்குறி.












Click it and Unblock the Notifications