வட மாநிலம் செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்திருக்கிறீர்களா? 12 ரயில்கள் ரத்து பட்டியலை இங்கு பாருங்க!
சென்னை: மத்திய பிரதேசத்தில் உள்ள இடார்சி ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்து பட்டியல் இதோ...
பெங்களூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பாட்னா புறப்பட்டு, சென்னை சென்டிரலுக்கு பிற்பகல் 3.40 மணிக்கு வர வேண்டிய சங்கமித்ரா ‘எக்ஸ்பிரஸ்' ரெயில்(வ.எண்:12295), ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பாட்னாவில் இருந்து பெங்களூருக்கு இன்று இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு, வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 1.55 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய சங்கமித்ரா ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (12296) ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து புது டெல்லிக்கு இன்று இரவு 7.15 மணிக்கு புறப்படும் கிராண்ட் டிரங்க் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (வ.எண்:12615) ரத்து செய்யப்பட்டுள்ளது.
புது டெல்லியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இன்று இரவு 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய கிராண்ட் டிரங்க் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (12616) ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து சப்ராவுக்கு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய வாரம் இருமுறை இயக்கப்படும் கங்கா காவேரி ‘எக்ஸ்பிரஸ்'(12669) ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்முதாவியில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு வருகிற 23-ந் தேதி காலை 10.10 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய வாரம் மூன்று முறை இயக்கப்படும் ஜம்முதாவி ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும்(16032), ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து லக்னோவிற்கு இன்று காலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய வாரம் இரு முறை இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (16093) ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரலுக்கு இரவு 11.25 மணிக்கு வந்து பின்னர் அங்கிருந்து இந்தூர் ஜங்சன் செல்லக்கூடிய அகில்யானகிரி ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (வ.எண்:22646), ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2.10 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக ஜம்முதாவி செல்லும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (வ.எண்:16317) ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், நெல்லையில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, காட்பாடி வழியாக ஜம்முதாவி செல்லும் வாரம் இரு முறை இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (16787), ஜெய்ப்பூரில் இருந்து நேற்று இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு 21-ந் தேதி காலை 9.45 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய வாரம் இரு முறை இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும்(12968) ரத்து செய்யப்பட்டன.
ஜம்முதாவியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரலுக்கு 22-ந் தேதி காலை 10.10 மணிக்கு வரவேண்டிய வாரம் மூன்று முறை இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (16032), ரத்து செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரலுக்கு இரவு 11.25 மணிக்கு வந்து சேர வேண்டிய கோரக்பூர் ரப்திசாகர் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (வ.எண்:12512), ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து ஜெய்ப்பூருக்கு வருகிற 21-ந் தேதி மாலை 5.40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும்(12967), ரத்து செய்யப்படுகிறது.
எனவே ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களில் முன் பதிவு செய்த பயணிகள் தங்கள் பயண திட்டத்தை அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ள ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.