வனப்பகுதியில் அனுமதியில்லாமல் மூலிகை பறித்த 12 பேர்.. ஆளுக்கு ரூ. 1000 அபராதம்
தருமபுரி: மொரப்பூர் வனப்பகுதியில் அபூர்வமான மூலிகைகளைப் பறித்த 12 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது வனத்துறை.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் வனச் சரகத்துக்கு உள்பட்ட எச்.அக்ரஹாரம் வனப் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
மேலும், அவர்கள் அந்தப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட காப்புக்காட்டுக்குள் முகாமிட்டு சமையல் செய்வதை கிராம மக்கள் சிலர் பார்த்ததாகவும் போலீஸாருக்கு அண்மையில் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன், அரூர் உதவிக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து எச்.அக்ரஹாரம், கீழ்மொரப்பூர், சோலைக்கொட்டாய் பகுதியிலுள்ள வனப் பகுதிகளில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒபிகாவலசு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் அவரது மனைவி மலர், கணேசன் அவரது மனைவி பாக்கியம், ராமசாமி, ஆறுமுகம், தேவராஜ், சேட்டு, செல்வம், ஆண்டி, மயில், குள்ளம்மாள் ஆகியோர் வனப் பகுதியில் தங்கியிருந்தனர்.
போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வனப் பகுதியில் தங்கி மூலிகை செடிகள், கிழங்குகள் பறித்து கொண்டுபோய் வெளியூர்களில் விற்பனை செய்பவர்கள் என்பதும், வழக்கமாக காட்டுப்பகுதிக்கு வரும் இவர்கள் ஒரு வாரம் வரை தங்கியிருப்பார்கள் என்பது தெரிந்தது.
இதையடுத்து, வனப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து மூலிகைகள் பறித்த குற்றத்துக்காக 12 பேருக்கும் தலா ரூபாய் 1,000 வீதம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார். அபராதம் செலுத்தப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.