தமிழகத்தின் 12 மாநகராட்சிகளும் "ஸ்மார்ட் சிட்டி"களாகின்றன...
சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 12 மாநகராட்சிகளுமே மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் வாஜ்பாய் பெயரிலான அம்ருத் திட்டத்துக்கு 29 நகரங்களும் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் நகரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், வாஜ்பாய் பெயரிலான 'அம்ருத்' திட்டம் ஆகியவையும் அடங்கும். இவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100 நகரங்களும் அம்ருத் திட்டத்தின் கீழ் 500 நகரங்களும் தேர்வு செய்யப்படுகின்றன.
இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகியவற்றுடன் வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வாஜ்பாய் பெயரிலான அம்ருத் திட்டத்துக்கு 1 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட 29 நகரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications