ஒண்டி வீரன் நினைவு நாள்.. பூலித்தேவன் பிறந்த நாள்.. நெல்லையில் 144 தடை உத்தரவு
நெல்லை: ஒண்டிவீரன் நினைவு நாள், பூலித்தேவன் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர்) 2-ந் தேதி வரை 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகாவில் உள்ள நெற்கட்டும் செவல் கிராமத்தில் ஒண்டிவீரன் நினைவு நாள் நாளை (20-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி பூலித்தேவனின் பிறந்த நாள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் மக்கள் வருவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஆண்டுதோறும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரித்திடவும் இன்று (ஆகஸ்ட் 19) முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை காலை 5 மணி முதல் 12 -ஆம் தேதி காலை 5 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாலங்குளத்தில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள்,சுருள் கத்தி, கம்பு வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டுச் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.

நெற்கட்டும் செவல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அந்த வழியாக வாடிக்கையாக நின்று செல்லும் வாகனங்கள், வெளி இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவை இயங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதர வாகனங்களாகிய டூரிஸ்ட் மோட்டார், கேப்ஸ், டூரிஸ்ட் மேக்சி கேப்ஸ், அகில இந்திய டூரிஸ்ட் மோட்டார் கேப்ஸ், தொண்டர்களை ஏற்றிவரும் சுற்றுலா வாகனங்கள், தற்காலிக அல்லது சிறப்பு அனுமதி பெற்ற வாடிக்கை வாகனங்கள் நெல்லை மாவட்ட எல்லைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி சிவகிரி, சங்கரன்கோவில், நடுவக்குறிச்சி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, நெல்லை மாநகர பகுதியிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் நெல்லை சரக டி.ஐ.ஜி.தினகரன் தலைமையில் 5 மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து போலீசார் நெல்லை வந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், குருவிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளை நாளை ஒருநாள் மூடவும் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications