சென்னை ஐடி நிறுவனத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து.. ஊழியர்கள் காயம்
Recommended Video
சென்னை: ஐடி நிறுவனத்தில் 2 கிரேன்கள் விழுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி பகுதியிலுள்ளது zoho என்ற ஐடி நிறுவனம். இது 500 அடி உயரத்தில், 12 மாடி கட்டிடத்துடன் பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இப்போது, 13வது தளம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டுமான பணியில் 2 ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதில் நிறுத்தப்பட்ட ஒரு கிரேன் இன்று மதியம், திடீரென சரிந்து விழுந்தது. அதை தூக்க மற்றொரு கிரேன் பயன்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராமல் அதுவும் விழுந்தது.
வேன் மீது விழுந்தது
ஒரு கிரேன் அங்கு நின்ற ஒரு வேன் மீது விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஐடி ஊழியர்கள் 3 பேர் காயமடைந்தனர். மற்றொரு கிரேன், நிறுவனத்தின் 7வது மாடி கட்டிடதின் பக்கவாட்டில் விழுந்தது.
வெளியே வந்து பார்த்தனர்
இதனால் அந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். அந்த கட்டிடத்தில் பணியாற்றிய ஐடி ஊழியர்கள் பலரும் அச்சத்தினால் வெளியே ஓடி வந்து பார்த்துள்ளனர். ஆனால் இதன்பிறகு நிலைமை சீரடைந்தது.
போலீசார் குவிப்பு
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அதேநேரம், பத்திரிகையாளர்களை கட்டிட எல்லைக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிருஷ்டவசமாக தப்பினர்
காயமடைந்தவர்களில் ஒருவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. மற்ற இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர். இதனால் கூடுவாஞ்சேரி பகுதியில் ஐடி ஊழியர்கள் நடுவே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.