எஸ்கேப் ஆக முடியாது.. வாக்குப்பதிவு நாளில், தமிழக தியேட்டர்களில் காலை, மேட்னி ஷோக்கள் ரத்து!
சென்னை: வாக்குப்பதிவு தினமான நாளை மறுநாள், காலை மதியம் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தியேட்டர் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், வரும் திங்கள்கிழமை, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு தினத்தன்று, தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு, சம்பளத்தோடு கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
100 சதவீத வாக்குப்பதிவு
100 சதவீத வாக்குப்பதிவை நோக்கி தேர்தல் ஆணையம் எடுத்துவரும் முயற்சியின் ஒரு நகர்வாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், விடுமுறை தினத்தை பயன்படுத்திக்கொண்டு, பொழுது போக்கு இடங்களுக்கு செல்ல கணிசமான மக்கள் விரும்புவது வழக்கம்.
2 காட்சிகள் ரத்து
வாக்காளர்கள், திரையரங்கு நோக்கி சென்றுவிடக்கூடாது, வாக்குப்பதிவு மையங்களை நோக்கி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், திங்கள்கிழமை காலை மற்றும் மதியம் ஆகிய 2 நேர காட்சிகளை தமிழ்நாடு திரையரங்குகள் ரத்து செய்ய உள்ளது.
அறிவிப்பு
தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜனநாயக கடமை
திரைப்படங்களை பார்த்து குதுகலித்துவிட்டு, வாக்குப்பதிவு மையங்களுக்கு மட்டம் போடலாம் என்று நினைத்த வாக்காளர்கள், இனியாவது காலையிலேயே சென்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்களா, என்பதை திங்கள்கிழமை பார்க்கலாம்.