நில விற்பனையில் தகராறு.. தூத்துக்குடியில் 2 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நிலம் விற்பது தொடர்பான தகராறில் இரண்டு பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகேயுள்ள வர்த்தகரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிபாண்டி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் அப்பகுதியில் புதிதாக சொந்த வீடு கட்டிவருகிறார். கட்டிட பணி நடைபெற்றுவரும் வீட்டில் தூங்குவது வழக்கம்.
இதேபோல் நேற்றிரவு அந்தோணிபாண்டியும் அவருடன் கட்டுமான பணி செய்துவரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஷ்யாம்சுந்தர் என்பவரும் படுத்து தூங்கினர். இந்நிலையில் இன்று காலை அந்தோணிபாண்டியின் மனைவி கட்டுமானபணி நடைபெற்றுவரும் வீட்டிற்கு காபி கொடுக்க சென்ற போதுதான் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தட்டாப்பாறை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரனையில் நிலம் விற்பது வாங்குவது தொடர்பாக அந்தோணிபாண்டிக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் அந்தோணிபாண்டியுடன் அப்பாவியான கொத்தனார் ஷ்யாம்சுந்தரையும் சேர்த்து கொலையாளிகள் வெட்டிக்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications