கோடை சூட்டை தணிக்கப் போய் பரிதாபம்! பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நண்பர்கள்
கோவை: கொளுத்தும் வெயில் சூட்டின் கொடுமையிலிருந்து தப்பிக்க போய் பவானி ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையை அடுத்த சாமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் செந்தில்குமார் . இவர் பக்கத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
காரமடையை அடுத்த பெட்டதாபுரத்தை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் ஆல்பன். தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவரும் செந்தில்குமாரும் நெருங்கிய நண்பர்கள்.
இந்நிலையில் செந்தில்குமார் தான் பணியாற்றிய நிறுவனத்தில் சனிக்கிழமை ஊதியம் வாங்குவதற்காக வெள்ளிபாளையத்தில் உள்ள தனது நிறுவனத்திற்கு பைக்கில் சென்றார்.
அப்போது ஆல்பனையும் தனது பைக்கில் கூட்டிச் சென்றார். இருவரும் வெள்ளிபாளையம் அருகே சென்றபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கவே வழியிலிருந்த பவானி ஆற்றில் இறங்கி இருவரும் குளித்துள்ளனர்.
நீச்சல் தெரியாத நிலையில் இருவரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் காப்பற்ற முயன்றும் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முடிய வில்லை.
இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலிஸ் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி மற்றும் தீயணைப்பு அலுவலர் பழனிசாமி தலைமையிலான மீட்பு படையினர் ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரமாக நடைபெற்ற தேடுதல் பணி இரவாகி விட்டதால் கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆற்றோரம் இருவரின் உடல்களும் மிதந்தன.
மேட்டுப்பாளையம் போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.