படகு விபத்து: முதல்வர் ஜெ. இரங்கல்– பிரதமர் அதிர்ச்சி; அந்தமான் விரைந்த தமிழக குழு
சென்னை: அந்தமான் தீவு அருகே நிகழ்ந்த படகு விபத்தில், மீட்புப் பணியை நேரில் ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவவும் தமிழக அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை அந்தமான் விரைந்தது.
அந்தமான் யூனியன் பிரதேசம், போர்ட் பிளேரில் உள்ள "பே ஐலேண்ட்" அருகில் தனியாருக்கு சொந்தமான சுற்றுலாப் படகு ஒன்று நேற்று மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்படகில் பயணம் செய்த 45 பயணிகளில் 33 பயணிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தமுள்ள 45 பயணிகளில் 28 பயணிகள் இறந்துள்ளதாக வந்த செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இரங்கல்
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தச் செய்தி கிடைக்கப் பெற்றவுடன், நான் உடனடியாக தலைமைச் செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு, விபத்துக்கு உண்டான படகில் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து முழுத் தகவல் பெறுமாறும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் நான் உத்தரவிட்டேன்.
எனது உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அந்தமான் யூனியன் பிரரேசத்தின் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இருப்பினும், தமிழ்நாட்டைச் சேர்ந்த எத்தனை பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர், எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இன்னமும் அந்தமான் நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை.

அரசு செலவில்
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை செயலாளர் ஆகியோரை உடனடியாக போர்ட் பிளேருக்கு செல்லுமாறும், மீட்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், மீட்கப்பட்டவர்களையும், உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களையும் உடனடியாக அரசு செலவில் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.

உறவினர்களுக்கு ஆறுதல்
இது மட்டுமல்லாமல், இறந்தவர்களின் உடல்களை அரசு செலவில் சென்னைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயர விபத்தில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், விபத்துக்குள்ளானவர்களின் விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் 1070 என்ற தொலைபேசி உதவி எண் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் நிவாரணம்
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரதமர் அதிர்ச்சி:
விபத்து குறித்து வேதனையும், அதிர்ச்சியும் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், உயிரிழந்தோரின் குடும்பத் தாருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் அனைத்து மத்திய அமைப்புகளும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து நீதிவிசாரணைக்கு அந்தமான் நிகோபார் அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications