அரிவாள், தடிகளுடன் கொடூரமாக தாக்கிய தனியரசு அடியாட்கள்- வேடிக்கை பார்த்த போலீஸ்!!
கோவை: கோவையில், தனியரசு எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள், பட்டப்பகலில் போலீஸ் கண்முன் அரிவாள், தடிகளுடன், தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ராம்நகர், சென்குப்தா தெருவில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின், மாநகர் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ., தனியரசுவுக்கு சொந்தமான இந்த அலுவலகத்துக்கு அருகிலுள்ள கட்டடத்தில், மருந்து ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
அங்கு, மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் தாங்கள் வந்த வாகனங்களை அலுவலகத்தின் முன்புறம், சாலையோரத்தில், நிறுத்திவிட்டு சென்றனர். திரும்பி வந்தபோது, 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருந்தன; மற்ற வாகனங்களும் கீழே தள்ளி விடப்பட்டிருந்தன.
எம்.எல்.ஏ., தனியரசு அலுவலகத்திலிருந்த ஆட்கள் தான், இதை செய்தனர் என்று தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு காட்டூர் போலீசார் வந்து விசாரணை நடத்திய போது, தனியரசுவின் புகைப்படம் ஒட்டி, கொடி கட்டியிருந்த இரு கார்களில், ஏழு பேர் வந்தனர். வாகனங்களில் இருந்து, வீச்சரிவாள் மற்றும் தடிகளை எடுத்து, போலீசாருடன் பேசிக் கொண்டிருந்த மருந்து விற்பனைப் பிரதிநிதிகளைப் பார்த்து, கத்தியபடி வரவே, அந்த இளைஞர்கள் பயந்து ஓடினர்.
எனினும் விடாமல் விரட்டிய ரவுடிகள், அந்த இளைஞர்கள் சிலரை தாக்கினர். இதில், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரது மண்டை உடைந்து, ரத்தம் கொட்டியது. சிலர், ஹெல்மெட் மற்றும் பைகளால் தங்களை தற்காத்துக் கொண்டு, தப்பியோடினர். போலீசார் கண் முன் நடந்த இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் நடுரோட்டில் எம்.எல்.ஏ., ஆட்களின் அராஜகத்தை பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். பிரச்னை பெரிதாவதை அறிந்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் வீடியோ படம் எடுப்பதை அறிந்த போலீசார், தனியரசுவின் ஆதரவாளர்களை சமாதானப்படுத்த முயன்றனர். சிறிது நேரத்தில், துணை கமிஷனர் ரம்யாபாரதி, தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்து, தனியரசு ஆட்களிடமிருந்து, அரிவாள் மற்றும் தடிகளை போலீசார் கைப்பற்றி, அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.