கன்னியாகுமரியில் பேருந்து மோதி 3 பேர் பலி- நால்வர் படுகாயம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி 3 பேர் உயிரிழந்தனர். தனியார் கல்லூரிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையில் சென்றவர்கள் மீது மோதியது.
அருமணையில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு குலசேகரம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. கல்லூரி முடிந்த மாலை நேரம் ஆனதால் இதில் சுமார் 40 மாணவிகள் இருந்துள்ளனர்.
புத்தன் கடை பகுதியில் வரும் போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் பேருந்து தறுமாறாக ஓடியுள்ளது. திருவட்டார் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த வேனின் பின்புறம் இடித்தது.
வேன் டிரைவர் வேனை வேகமாக எடுத்து சென்றதால் அதிலிருந்த பயணிகள் உயிர் தப்பினர். தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மின் கம்பத்தில் பேருந்து மோதியது. இதில் மின் கம்பம் 3 துண்டுகளாக உடைந்து விழுந்தது. இதன் பிறகும் வேகம் குறையாமல சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஜான் அமல்ராஜ் என்பவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் திருவட்டார் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த சொகுசு கார் மீது மோதியது. இதில் கார் பேருந்துக்கு அடியில் சிக்கியது.
இதில் அருமநல்லூர் பகுதியை சேர்ந்த கருமணியாபிள்ளை என்பவர் தனது மனைவி நீலம்மாள் என்பவரை பாறசாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று கொண்டிருந்தார். காரை அருமனையை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்து என்பவர் ஓட்டியுள்ளார். இதில் கார் சின்ன பின்னமானதால் அதில் இருந்தவர்களை மீட்பது சிரமமாக இருந்தது.
இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பேருந்து பயணி ஒருவர் கல்லூரி பேரூந்தில் ஏறி அதை பின் பக்கமாக நகர்த்தினார். இதையடுத்து காரில் படுகாயத்துடன் கிடந்த 3 பேரையும் பொதுமக்கள் மீட்டனர். பின்னர் அவர்களை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் அங்கு பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. இதில் பேரூந்தை ஓட்டிய டிரைவர் அதிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.