இவர்கள் ஒரு "ஸ்வீட் சிக்ஸ்டீன்" திருடர்கள் - எப்படின்னு தெரியுமா?
கோவை: கோவையில் 16 நகைப்பறிப்பு நிகழ்வுகளில் தொடர்புடைய பெண் உட்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகரில் சமீபகாலமாக வழிப்பறி மற்றும் பெண்களிடம் நகைபறிப்பு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக இருந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் விசுவநாதன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் ரம்யாபாரதி மேற்பார்வையில், ஆய்வாளர்கள் ரமேஷ்கண்ணன், மணிவர்மன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கோவை தடாகம் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இடையர்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார், வேலாண்டிபாளையத்தை சேர்ந்த சந்திரபோஸ் என்பதும் இவர்கள் கோவையில் 16 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் பணக்காரர்களாக ஆக வேண்டும், அதன் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்கு குறுக்கு வழிதான் சிறந்தது என தேர்வு செய்தோம். இதனால் கடந்த இரு ஆண்டுகளாக நகை பறிப்பு சம்பவங்களில் சேர்ந்தே ஈடுபட்டோம். கொள்ளையடித்த நகைகளை தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்தும், விற்றும் பணமாக மாற்றினோம்.
அடுத்த கட்டமாக பெரிய அளவில் கொள்ளை நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டோம்" என்று தெரிவித்துள்ளனர். இவர்களில், சிவக்குமார் டிப்ளமோ படித்து விட்டு லேத் ஒர்க்ஷாப் வைத்து வேலை செய்து வந்துள்ளார். சந்திரபோஸ் 9ம் வகுப்பு படித்து விட்டு வேன் டிரைவராக இருந்து வந்துள்ளார். வழிப்பறி செய்த நகைகளை விற்ற பணத்தில் சிவக்குமார் ரூபாய் 1 கோடி மதிப்பில் ஆடம்பரமான சொகுசு பங்களா வீடு கட்டி உள்ளார்.
இதற்கிடையில் பெண்களிடம் பறித்த நகைகள் பலவற்றை சிவக்குமார் தனது மனைவி பிரதீபா என்பவரிடம் கொடுத்து வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதனை அவர் சில நகைகளை அணிந்து கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அதனை அடகு வைத்து பணமாக்கி முதலீடு செய்துள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த நகை பறிப்பில் உடந்தையாக இருந்ததாக பிரதீபாவையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications