நெல்லையில் போலீஸ் வாகனத்தில் கைதி கொலை.. மேலும் 3 பேர் கைது.. மும்பை விரைந்த தனிப்படை
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கைதி சிங்காரம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம் கைதி சிங்காரம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமான சிங்காரம் என்ற கைதியை, அவர் மீதான குற்ற வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக பாளையங்கோட்டை சிறையிலிருந்து காவல்துறை வாகனத்தில் காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறையிலிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே, மூன்று கார்களில் வந்த கும்பல், காவல்துறை வாகனத்தின் மீது தங்கள் வாகனத்தை மோதி தடுமாற வைத்தன. காவல்துறை வாகனத்தில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி மற்றும் தண்ணீரை வீசி நிலைகுலையச் செய்ததுடன், கைதி சிங்காரத்தை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்த வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த அருள்மணி உள்ளிட்ட 8 பேர் கைதாகியுள்ளனர். கொலைக்கு அவர்கள் பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கு காரணமாக இருந்த சுபாஷ் பண்ணையார் என்ற சிவசுப்பிரமணியன் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி தனிப்படை போலீஸார் மும்பை சென்றுள்ளனர்.