சென்னை வெள்ளத்தால் 300 பேர் டிஸ்மிஸ்: செல்போன் டவரில் ஏறி என்ஜினியர் போராட்டம்
சென்னை: 300 பேருக்கு வேலை போனதை கண்டித்து என்ஜினியர் ஒருவர் சென்னையில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மீது வாலிபர் ஒருவர் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஏறி போராட்டம் நடத்தினார். கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் கூறினார். இதை பார்த்த அப்பகுதி வாலிபர்கள் அவரை கீழே இறக்க முயற்சி செய்தனர்.
கோபுரத்தில் ஏறிய வாலிபர்களை அவர் எட்டி உதைத்தார். இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து அந்த வாலிபரை கீழே இறங்க வைத்தனர். இதையடுத்து மாலை 4 மணிக்கு அவர் கீழே இறக்கிவிடப்பட்டார்.
கீழே இறங்கிய அவர் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கற்களை வீசினார். இதனால் பொது மக்கள் பதிலுக்கு அவர் மீது கற்களை வீசினார்கள். போலீசார் அந்த வாலிபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
என் பெயர் ஜெயபாலன்(24). திருச்சியை சேர்ந்த நான் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னை தரமணி டைடல் பார்க்கில் இருக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். மாத சம்பளம் ரூ.10 ஆயிரத்து 500. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது என்னால் வேலைக்கு செல்ல முடியாமல் போனது. அதை காரணம் காட்டி என்னை பணிநீக்கம் செய்துவிட்டனர்.
என் தோழி மற்றும் என்னுடன் வேலை பார்த்த 300 பேரையும் பணிநீக்கம் செய்துவிட்டனர். எங்களுக்கு 1 மாத சம்பளமும் அளிக்கவில்லை. மீண்டும் எங்களை வேலையில் சேர்க்கவும், சம்பள பாக்கியை அளிக்கவும் வலியுறுத்தி தான் நான் செல்போன் கோபுரத்தில் ஏறி போராடினேன் என்றார்.
போலீசார் மற்றும் பொது மக்களை எட்டி உதைத்தும், கற்களை வீசியும் தாக்கியதால் ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.