தமிழக- ஆந்திர எல்லை கிராமத்தில் குளத்தில் விஷம் கலப்பு: மாடு,33 ஆடுகள் சாவு
வாணியம்பாடி: தமிழக - ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள குளத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையில் மாதகடப்பா என்ற வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாராயம் காய்ச்சும் கும்பல்கள் அதிகம் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை மாத கடப்பா வழியாக சென்ற சிலர், அங்குள்ள குளம் அருகில் 33 ஆடுகள், 1 மாடு மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வனத்துறையினர், வாணியம்பாடி தாசில்தார் செந்தில், தாலுகா இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த மாடு, ஆடுகளின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, மாடு, ஆடுகள் நேற்று மேய்ச்சலுக்காக வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. தாகம் தணிக்க அங்குள்ள குளத்தில் தண்ணீர் குடித்தது. அதன் பிறகே மாடு, ஆடுகள் இறந்துள்ளன.
இதனால் குளம் நீரில் மர்ம நபர்கள் சாராயம் மற்றும் விஷம் ஏதாவது கலந்து மாடு, ஆடுகளை கொன்றனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் குளக்கரை அருகில் சாராய ஊறல்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சில தினங்களுக்க முன்னர் ஆந்திரா வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் ஆந்திராவுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக எல்லை கிராமத்தில் குளத்தில் விஷம் கலந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த கால்நடைகள் அனைத்து எல்லைப் பகுதியில் வசிக்கும் தமிழர்களான எர்ரப்பன், குமார், சிவா, கிருஷ்ணமூர்த்தி, சரோஜா ஆகியோருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications