அதிமுக ஆட்சியில் 10 மாதத்திற்குள் 3 முதல்வர்கள்...
2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைவதற்குள் அதாவது 10 மாதத்திற்குள் 3வது முறையாக புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. 3வது முதல்வர் பதவியேற்றுள்ளார்.
சென்னை: 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்ற அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. எதிர்பாராத விதமாக 10 மாதத்திற்குள் 3வது முறையாக புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. 3 முதல்வர்கள் மாறியுள்ளனர்.
ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி பதவியேற்றது. திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சீனிவேல் பதவியேற்புக்கு வர முடியாமலேயே மரணமடைந்தார். அதுவே அபசகுணமாக கருதப்பட்டது.

நள்ளிரவு முதல்வர்
முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதா 5 மாதத்தில் உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பாமலேயே அவர் 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
62 நாட்கள் முதல்வர்
62 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவியில் இருந்தார் ஓ.பன்னீர் செல்வம். பிப்ரவரி 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் எழுப்பிய கலகக்குரலால் கட்சியே இரண்டாக பிளவுபட்டது.
கட்சியில் பிளவு
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லவே, எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யதனர். அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதன்மூலம் தமிழக அரசியலில் 10 நாட்கள் இருந்த சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. 31அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் இடம் பெறவில்லை.
3வது முறை பதவியேற்பு
2016 சட்டசபை தேர்தல் நடைபெற்று 10 மாதத்திற்குள் 3 வதுமுறை புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. நான்கு ஆண்டுகள் இந்த அரசு தொடருமா? எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிப்பாரா என்பது எம்எல்ஏக்களின் ஆதரவினை பொருத்தே முடிவாகும்.
3வது முதல்வர்
கடந்த 2011ஆம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அரசு இதே போல 3 முறை பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பத்து மாதத்திற்கு 3வது முறையாக புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போதுஅமாவாசைக்கு அமாவாசை அமைச்சர்கள்தான் மாறுவார்கள். இந்த முறை ஓராண்டுக்குள் 3வது முறையாக முதல்வர் மாறியுள்ளார் என்பதுதான் வேதனை.












Click it and Unblock the Notifications