55 வயதில் 4வது திருமணம்: தடுத்து நிறுத்திய 3 வது மனைவி
கோவை: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் மூன்று திருமணங்களை மறைத்துவிட்டு 4 வது திருமணம் செய்ய முயன்ற 55 வயது நபரின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோவை மாநகராட்சி, செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்தவர் சமீம் நிஷா (வயது-28). முதல் கணவரைப் பிரிந்த இவர், இரு ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூரைச் சேர்ந்த பழ வியாபாரி ஷேக் ரசூலை (வயது-55) திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளான்.
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஷேக் ரசூலுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருப்பது சமீம் நிஷாவுக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அவர் கணவருடன் வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து, சமீம் நிஷாவின் குடும்ப செலவுக்கு பணம் தருவதை நிறுத்திக் கொண்டார்.
வேறுவழியில்லாமல், சமீம் நிஷா அதே பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்த துவங்கினார். சமீம் நிஷாவை விபச்சார தொழில் செய்யுமாறு ஷேக் ரசல் வற்புறுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதற்கு சமீம்நிஷா மறுக்கவே, அவரை கோவையிலுள்ள தாய் வீட்டுக்கு மகனுடன் அனுப்பி வைத்தார்.
கடந்த ஏழு மாதங்களாக கணவரைப் பிரிந்து கோவையில் உள்ள தாய் வீட்டில் சமீம் நிஷா வசித்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூரில் ஷேக் ரசூலுக்கு நான்காவது திருமணம் நடைபெறவுள்ளதாக சமீம் நிஷாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை அனைத்து மகளிர் மேற்கு போலீஸில் இது குறித்துப் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, இது குறித்து திருப்பத்தூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், கோவை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஷேக் ரசலை பிடிக்க சமீம்நிஷாவுடன் திருப்பத்தூர் விரைந்துள்ளனர்.