மதுரை அருகே லாரி மீது மோதி அப்பளமாய் நொறுங்கிய கார் - 4 பேர் பரிதாப பலி
மதுரை: மதுரை மேலூர் அருகே கார் மீது லாரி மோதிய சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை - திருச்சி 4 வழிச்சாலையில் மேலூர் அருகே கத்தப்பட்டியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகே 4 வழிச்சாலையின் ஒருபகுதியில் மராமத்து பணிகள் நடந்து வந்தன. இதனால் நேற்று அந்த சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருந்தது. இதனால் 4 வழிச்சாலையின் ஒருபுறத்தில் இருந்த சாலையில் மட்டும் வாகனங்கள் வந்து சென்றன.
நேற்று இரவு 11.40 மணியளவில் சிவகாசியில் இருந்து வந்த ஒரு லாரியும், காரைக்குடியில் இருந்து வந்த காரும் கத்தப்பட்டி சுங்கச்சாவடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. அந்த காரில் பயணம் செய்த 7 பேரில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவல் அறிந்ததும் மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கி காரைக்குடியை சேர்ந்த அன்பரசன், சதீஷ், நந்தகுமார் ஆகிய 3 பேர் காருக்குள்ளேயே இறந்தனர். படுகாயம் அடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாண்டிய ராஜன் என்பவர் இறந்து போனார்.
மணி, அருணாசலம் உள்பட 3 பேர் மேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் காரணமாக மேலூர்-மதுரை இடையே 4 வழிச்சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications