தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரம்: சென்னையில் சிறுமி பலி, கோவையில் மூவர் மரணம்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். சென்னை, கோவையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். சென்னையில் சிறுமி ஒருவர் டெங்குவிற்கு பலியாகியுள்ளார்.
இந்தியாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் கேரளா உள்ளது. கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் ஜூலை 23ஆம் தேதி வரை 5,013 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பரவும் டெங்கு
தமிழக மக்கள் தற்போது டெங்கு காய்ச்சல் நோயினால் பீதி அடைந்து இருக்கின்றனர். நல்ல தண்ணீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுக்களினால் இந்த நோய் பரவி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை உலுக்கி எடுத்துவரும் இந்த டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டும் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது.

டெங்கு பீதி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் பரவும் டெங்கு
கோவை மாவட்டத்தில் டெங்கு, மர்மக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், 200 படுக்கை வசதிகள்கொண்ட தனி வார்டு ஒதுக்கப்பட்டு 24 மணி நேர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே டெங்கு, காய்ச்சல் நோயாளிகளுக்கான ரத்தத்தின் தேவையும் அதிகரித்துள்ளது.

3 பேர் பலி
டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த பொள்ளச்சியைச் சேர்ந்த சிறுமி நிஷாந்தினி,4 உயிரிழந்தார்.எஸ்.எஸ்.குளத்தைச் சேர்ந்த சாந்தாமணி,44 என்பவரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் வீரபாண்டிப்பிரிவைச் சேர்ந்த சதீஷ் குமார்,30 பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் டெங்கு பலி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

சென்னையில் சிறுமி பலி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரும் டெங்குவால் பாதித்து சிகிக்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுமி சுஜாதா உயிரிழந்தார்.

நிலவேம்பு குடிநீர்
டெங்குவில் இருந்த தப்பிக்க நிலவேம்பு குடிநீர் பருகவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications