நரிக்குறவ சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த 4 வாலிபர்கள்... பொதுமக்கள் தர்ம அடி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோயில் விழாவுக்காக வந்திருந்த நரிக்குறவ சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள் 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தசரா விழா வருவதை முன்னிட்டு மதுரை கல்லுமேடு பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் ஒரு குடும்பமாக ஊசி, பாசி உள்ளிட்ட பொருட்களை விற்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.

அக்குடும்பத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கூடாரத்தில் தூங்கி கொண்டிருந்தாள். அப்போது கூடாரத்தின் பின்புறம் வழியாக நுழைந்த 4 பேர் கும்பல் திடீரென சிறுமியின் வாயைப் பொத்தி தூக்கி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் அவர்கள் பிடி கொஞ்சம் தளர்ந்ததால் 4 பேரிடம் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி சத்தம் போட்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எழுந்த பார்த்தபோது சிறுமியை மட்டும் காணாதது கண்டு அதிர்ச்சியில் உறைந்து சத்தம் வந்த இடத்திற்கு விரைந்தனர். மக்கள் வருவதை பார்த்ததும் 4 பேரும் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பியோட முயன்றனர். இருப்பினும் அனைவரும் சேர்ந்து 4 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 4 பேரும் நாசரேத் பகுதியை சேர்ந்த கார் டிரைவர்களான தினேஷ், ஸ்டாலின், கட்டிட தொழிலாளி இசக்கிமுத்து, ஜவுளி வியாபாரி ஐகோர்ட்டு துரை என்பதும், சிறுமியைக் கடத்தி சென்று பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications