அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் மோதிய தென் சென்னை: 3 மின்னணு இயந்திரங்கள்
சென்னை: லோக்சபா தேர்தல்களில் நாட்டிலேயே அதிகப்படியான வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதி என்று அறியப்பட்ட தென் சென்னையில் இம்முறை இறுதியாக 42 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் மோதும் தொகுதி இதுதான் என்ற பெருமையை மட்டும் தற்போதைக்கு இந்த தொகுதி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அண்ணா, ஆர். வெங்கட்ராமன்
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இதற்கு முன்னர் தென் சென்னை தொகுதியில் இருந்துதான் லோக்சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஆர்.பாலு 4முறை
இந்த தொகுதியில் இருந்து ஆர்.வெங்கட்ராமன் இரு முறையும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு 4 முறையும், வெற்றி பெற்றுள்ளனர்.
நடிகை வைஜெயந்திமாலா
பிரபல நடிகையும் நாட்டியக் கலைஞருமான டாக்டர் வைஜெயந்திமாலா பாலி இரு முறையும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இரு முறையும் வெற்றி பெற்று எம்.பி.யாகி உள்ளனர்.
திமுக 8முறை வெற்றி
1952-ம் ஆண்டிலிருந்து 2009 வரை நடைபெற்ற 15 நாடாளுமன்ற தேர்தல்களில், தி.மு.க. 8 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அ.தி.மு.க. இரு முறையும், (இந்திரா) காங்கிரஸ் ஒரு முறையும் தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக ஜெயராமன்
இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களாக அ.தி.மு.க. சார்பில் டாக்டர் ஜெ. ஜெயவர்தன், தி.மு.க. வேட்பாளராக டி.கே.எஸ்.இளங்கோவன், பா.ஜ.க. சார்பில் இல. கணேசன், காங்கிரஸ் வேட்பாளராக ரமணி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
42 வேட்பாளர்கள்
இவர்களுடன் பிரபல சுயேட்சை வேட்பாளராக டிராபிக் ராமசாமி களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் இம்முறை 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
3 மின்னணு இயந்திரங்கள்
இதனால் தென் சென்னைக்குட்பட்ட வாக்குசாவடிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் இரண்டு இயந்திரங்களில் தலா 16 வேட்பாளர்களின் பெயர்களும், ஒரு இயந்திரத்தில் 10 வேட்பாளர்களின் பெயர்களும், ஒரு ‘நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) பொத்தானும் அமைக்கப்பட்டிக்கிறது.
1033 வேட்பாளர்கள் போட்டி
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் தான் நாட்டிலேயே அதிகபட்சமாக ஆயிரத்து 33 வேட்பாளர்கள் 1996-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வழங்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் புத்தக வடிவில் அச்சிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.