நாளை முதல் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் மீன் சாப்பிடலாம்
ராமேஸ்வரம்: அசைவ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. மீன்பிடிக்கால தடை இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளதால் மீன்களின் விலை குறையத்தொடங்கும்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஆண்டுதோறும், ஏப்ரல் 15ம்தேதி முதல் மே 29ம்தேதி வரை 45 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்படி, கடந்த ஏப்ரல் 15ம்தேதி முதல் அமல்படுத்தப்பட்டமீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நாளை அதிகாலை முதல் மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு சென்று மீன்பிடிக்க உள்ளனர்.

இதனால் மீன் விலை குறைய வாய்ப்புள்ளது. மீன் பிடி தடைக்காலத்தில் மீன் விலை பல மடங்கு அதிகரித்ததுடன், அதன் சுவையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சென்னையில் நேற்று வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1400க்கு விற்பனையாகியது. பிற மீன்கள் 60 முதல்70 சதவீதம் விலையேற்றத்துடன் காணப்பட்டன. தடைக்காலம் நீங்கியுள்ளதால் இனிமேல் சுவை மிகுந்த மீன்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் மீன்பிடிக்காலம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும். அதுவும் நீங்கிய பிறகு சந்தைக்கு மீன் வரத்து மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில், அனைத்து மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம், ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல வருடங்களாக இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி செய்து, இரண்டு வருடமாக மீனவர்களின் விடுதலைக்கு போராடி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications