நடுக் கடலில் பழுதான படகு.. தவித்த மீனவர்கள்.. கடலோர காவல் படையினர் மீட்டனர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நடுக்கடலில் தவித்த மீனவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் அமல்ராஜ். இவருக்கு சொந்தமான புஷ்பா என்ற நாட்டு படகில் அதே பகுதியை சேர்ந்த சதிஷ் உள்பட 5 பேர் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு புறப்பட்டனர்.
மணப்பாடு லைட் ஹவுசில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது. இதனால் அவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். மேலும் காற்றின் வேகம் காரணமாக படகு இழுத்து செல்லப்பட்டது.
இதனால் அவர்கள் செய்வது அறியாது திகைத்து போய் பரிதவிப்பில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த விசைப்படகு மூலம் மரைன் போலீசுக்கும், கடலோர காவல் படை கப்பலுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படை கப்பலான நாயகிதேவியில் இருந்த வீரர்கள் படகில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
மேலும் பழுதாகி நின்ற அவர்களின் படகை கயிறு மூலம் கப்பலில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். மீனவர்களும், படகும் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு மீன்துறை அதிகாரிகளிடம் ஓப்படைத்தனர்.
5 மீனவர்களையும் காணாமல் தவித்து கொண்டிருந்த அவர்கள் குடும்பத்தினர் இதன் பிறகு தான் நிம்மதியடைந்தனர். இதையடுத்து 5 பேரும் பத்திரமாக வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.