தேர்வுக்கு பயந்து பெங்களூரு சென்ற மதுரை மாணவர்கள் 5 பேர் மீட்பு
மதுரை, சோழவந்தான் கீழ் நாச்சிக்குளம் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வுக்கு பயந்து பெங்களூரு சென்றவர்கள் மீட்கப்பட்டனர்.
மதுரை: மதுரை அருகே சோழவந்தான் பள்ளி விடுதியில் மாயமான 5 மாணவர்களை போலீஸார் பெங்களூருவில் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சோழவந்தான் அருகே கீழ் நாச்சிக்குளத்தில் அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை ஒட்டி செயல்பட்டுவந்த அரசு ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கிப் படித்துவந்த மாணவர்களில் 5 மாணவர்கள் கடந்த ஜூலை 27 ஆம் தேதி முதல் திடீரென காணாமல் போனார்கள்.

மாணவர்கள் தகவல் சொல்லாமல் அவர்களுடைய வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று கருதிய விடுதி காப்பாளர், மாணவர்களின் வீட்டுக்கும் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார். அங்கே மாணவர்கள் வரவில்லை என்பது தெரிந்தது.
இதையடுத்து, விடுதி காப்பாளர், எட்டாம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவனும், பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் இரண்டு மாணவர்களும் பதினோராம் வகுப்பில் பயிலும் 2 மாணவர்கள் என மொத்தம் ஐந்து மாணவர்கள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், மாணவர்கள் காணாமல் போனது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து மாணவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மாணவர்கள் பெங்களூரில் இருப்பது குறித்து தகவல் அறிந்த போலீஸார் பெங்களூரு சென்றனர். அங்கே சாந்தி பார்க்கில் சுற்றித் திரிந்த 5 மாணவர்களை பத்திரமாக மீட்டு மதுரைக்கு கொண்டுவந்தனர்.
தேர்வுக்கு பயந்து இந்த மாணவர்கள் 5 பேரும் பெங்களூரு சென்றதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications