உயிர்கொடுத்த உறுப்பு தானம் - 6 பேருக்கு வாழ்வளித்த 5 வயது “ஜனஸ்ருதி”!
கோவை: கரூரில் விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கரூர் மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு. இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு அரசு விடுதியில் சமையல்காரராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களின் மகள் ஜனஸ்ருதி 5 வயதுக் குழந்தை.
கடந்த 2 ஆம் தேதி சிறுமி, தனது தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் சிறுமி ஜனஸ்ருதி கவலைக்கிடமான நிலையில் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி காலை சிறுமி மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதை தொடர்ந்து சிறுமியின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டன.
சிறுமியின் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை போர்டீஸ் மருத்துவமனைக்கும், இரண்டு கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், இதயவால்வுகள் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து சிறுமி ஜனஸ்ருதியின் தந்தை தங்கவேலு கூறுகையில், "எங்கள் மகள் உயிருடன் இல்லை. ஆனாலும் அவளின் உடல் உறுப்பு தானம் மூலம் 6 பேருக்கு வாழ்வளித்து உள்ளாள். என் மகள் மூலம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.