திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் 50 அம்மா உணவகங்கள்... "அம்மா கேஸ்" முடியும் வரை நோ ஓப்பனிங்??
சென்னை: சென்னையில் 50 அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றன. ஆனாலும் இவற்றை திறக்கும் வழிதான் தெரியவில்லை. தற்போது ஜெயலலிதா முதல்வராக இல்லாத நிலையில் இவற்றைத் திறக்க சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு விருப்பம் இல்லை என்று கூறுகிறார்கள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த அம்மா உணவகம். அம்மா திட்ட வரிசையில் முதல் திட்டம் இந்த அம்மா உணவகம்தான். இதற்கு ஏழைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், வேலைக்குச் செல்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது தமிழகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 207 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் எப்போதும் போல கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் மேலும் 50 அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.
மேலும் 100 அம்மா உணவகங்களை திறக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அதில், 50 அம்மா உணவகங்கள் கட்டி தயாராக உள்ளன. 60 முதல் 70 அம்மா உணவகங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. சுமார் 40 அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் நிலம் மற்ற அரசு துறைகளில் இருந்து பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டி முடிக்கப்பட்டு தயாராக உள்ள 50 அம்மா உணவகங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதிகாரிகள் தாமதம் செய்து வருகிறார்களாம். காரணம் தெரியவில்லை.
தற்போது ஜெயலலிதா ஆட்சியில் இல்லை. ஜாமீனில் வெளியே வந்து அப்பீல் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் திறப்பு விழாவை நடத்த மேயர் சைதை துரைசாமிக்கு மனம் இல்லை என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா விடுதலையாகி வந்த பின்னர் தடபுடலாக இவற்றை மொத்தமாக திறந்து விழா போல கொண்டாட அவர் விரும்புகிறார் என்கிறார்கள்.